கிம்மின் குடும்பத்தில் பலருக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார் என்றும், அதனால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வட கொரியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா, அந்நாட்டுக்கு தங்களின் மருத்துவ வல்லுநர் குழுவை அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.
கிம்மிற்கு சிகிச்சை அளிக்கத்தான் சீனக் குழு, வட கொரியா சென்றுள்ளதா என்பது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைக்கவில்லை.
இந்த வாரத் தொடக்கத்தில் தென் கொரியாவின் டெய்லி என்கே (Daily NK) என்னும் செய்தி இணையதளம், ‘கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இதயம் சம்பந்தமான சிகிச்சை கிம்முக்கு அளிக்கப்பட்டது. தற்போது அவர் அந்த சிகிச்சையிலிருந்து தேறி வருகிறார்' என்று தகவல் வெளியிட்டது. கிம்முக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வந்த தகவலை தென்கொரிய மற்றும் சீன அரசுத் தரப்புகள் உடனடியாக மறுத்தன.
இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, “கிம் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்று வரும் தகவல்கள் தவறானவை,” என்று கூறினார். அதே நேரத்தில், சமீபத்தில் கிம்முடன் தான் பேசினாரா என்பது குறித்து டிரம்ப் தகவல் சொல்ல மறுத்துவிட்டார்.
கிம்மின் குடும்பத்தில் பலருக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கிம்மின் தந்தையான கிம் ஜாங் உன் 2, 2011 ஆம் ஆண்டு நெஞ்சு வலி காரணமாக காலமானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக